Wednesday, March 6, 2024

ஜெயச்சந்திரன்- 80ஆவது பிறந்த நாள்- 40 இசையமைப்பாளர்கள்

  


இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

🎵💖
ஜெயச்சந்திரன்- 80ஆவது பிறந்த நாள்- 40 இசையமைப்பாளர்கள் 💖
2016 மார்ச் மாதம் ஒரு அழகான மாலை வேளையில் ஜெயச்சந்திரன் சாரை சந்தித்தேன். முதலில் அவர் வீட்டில் தான் சந்திப்பதாக இருந்தது. பின் ஏதோ வேலையாக மயிலாப்பூருக்கு வந்தவர், 'வுட்லேன்ஸல சந்திக்கலாமா? அவங்களோட சாம்பார் வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்'! என்றார் குழந்தையைப்போல...
அன்று ஆறஅமர இரண்டு மணி நேரம் பேசினோம். அதற்கு பிறகு ஒரு ஓணம் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட அவர் ஷார்ஜா வந்திருந்த போதும் சந்தித்து பேசினோம். ஃபோனிலும் அவ்வப்போது பேசுவதுண்டு.
ஆனாலும், அந்த முதல் சந்திப்பின் நினைவுகளை தான் இன்றும் பசுமையாக அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த அவரின் பாடல்களை ஒவ்வொன்றாய் நினைவுகூர்ந்து நான் சொல்ல சொல்ல மிகவும் ரசித்தது தன்னுடைய அனுபவங்களையும் அபிப்ராயங்களையும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் உற்சாகமாக பகிர்ந்துக்கொண்டார்.
மலையாளத்திலும் அருமையான வாய்ப்புகளை வழங்கி, தமிழிலும் தன்னை அட்டகாசமாக அறிமுகப்படுத்தி பல அழகான பாடல்களை பாடச்செய்த மெல்லிசை மன்னர் மேல் நெகிழ்ச்சியான பக்தி. இளையராஜாவின் அபார ஆற்றல் மேல் தனி மரியாதை. 'விழியோ உறங்கவில்லை', 'கண்ணனின் சந்நிதியில்', 'அன்பே உன் பேரென்ன ரதியோ', ' ராஜா வாடா சிங்கக்குட்டி' 'கண்ணன் முகம் காண', 'அமுத தமிழில்', 'Swing swing உனது ஊஞ்சல் நான்' போன்ற பாடல்களை நான் பட்டியலிட அவர் கண்களில் ஒரு மின்னல் வந்துப் போனது.
'அலையே கடல் அலையை', 'வெள்ளி நிலாவினினலே', 'செந்தூரக்கோலம் என் சிங்காரதீபம்', 'ராஜா பொண்ணு அடி வாடியம்மா', 'பூந்தென்றலே', 'கீதா சங்கீதா', 'நெஞ்சில் உள்ள காயமொன்று' என்று ஆரம்பகால இளையராஜாவின் இசையலைகளில் ஜெயச்சந்திரனும் சுகமாக வளம் வந்ததை ஆசையாய் நினைத்துப்பார்தோம். 'காற்றினிலே வரும் கீதம்', 'வைதேகி காத்திருந்தாள்', 'நானே ராஜா நானே மந்திரி', ' என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்', 'தழுவாத கைகள்' போன்ற ஜெயச்சந்தினை முன்னிறுத்தி வந்த இளையராஜாவின் ஆல்பங்களை குறிப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டார். ' ஒரு யாத்ராமொழி' படத்தின் 'மஞ்சோலும் ராத்திரி மாஞ்சு' பாடல் சில வரிகளை பாடினார்.
KVM பற்றி பேசினோம். 'அவரது இசையில் ஒரு பாடலை பாடி முடித்தவுடன் என்னை மிகவும் பாராட்டினார்...' என்றார். ' எங்கெங்கும் அவள் முகம்', '' எத்தனை அவதாரம் அடடா', ' மாளிகையானாலும் மலர்வனமானாலும்' என்று KVMமின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு இதுவா எனக்கேட்டேன். 'இல்லை...இல்லை... வேறொரு பாட்டு- கூட பாடினது சுசீலாம்மான்னு ஞாபகம்' என்றார். 'திருநாளும் வருமோ சுவாமி' என்று நான் பாட அரம்பித்தவுடன் என் கையைப்பற்றி 'அதே அதே!' என்றார் மகிழ்ச்சியாக.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மலரோ நிலவோ மலைமகளோ' பாடலை வியந்து பாராட்டினேன். 'மிகவும் சவாலான பாடல்... நல்லா encourage செய்து பாட வைத்தார்' என்றார். சங்கர்- கணேஷ் இசையில் 'பால் நிலவு காய்ந்ததே' பாடலை என் வேண்டுகோளை ஏற்று மேஜையின் மேல் தாளம் போட்டபடி அழகாய் பாடினார். மணி- ராஜா ( மரகதமணி- ராஜாமணி) இசையில் 'கிராமத்து கிளிகள்' படத்தின் 'கன்னிப்பெண் கன்னத்தின் காயங்களே' பாடலை நான் சிலாகித்த போது ஆச்சரியமாக பார்த்தார். ஓட்டலிலிருந்து கிளம்பும்போது 'சொன்னா நம்பமாட்டீங்க' என்ற படத்தில் K. லக்ஷ்மிநாராயணன் என்பவரின் இசையில் 'வளர்பிறை நிலவே நீ எங்கே' என்ற பாடலை நான் நினைவுப்படுத்தியதும் என்னை வாரி அணைத்துக்கொண்டார்!
1973 முதல் 2020 வரை தமிழ் திரையிசையில் தன் நீண்ட இசைப்பயணத்தில் எத்தனை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருப்பார் ஜெயச்சந்திரன்!
இன்று அவரது 80வது பிறந்த நாளில் 40 இசையமைப்பாளர்களின் இசையில் ஜெயச்சந்திரனின் பாடல் பட்டியலை தொகுத்து சமர்ப்பிக்கிறேன்- விஸ்வநாதனிலிருந்து சன்னி விஸ்வநாத் வரை எவ்வளவு இனிமையான பயணம் 💖
1. M.S. விஸ்வநாதன்- அலைகள்
2. K.V. மகாதேவன்- நெருப்பிலே பூத்த மலர்
3. V. தட்சிணாமூர்த்தி- நந்தா என் நிலா
4. குன்னக்குடி வைத்தியநாதன்- ராக பந்தங்கள்
5. G.K. வெங்கடேஷ்- பெண்ணின் வாழ்க்கை
6. சலீல் சவுத்ரி- அழியாத கோலங்கள்
7. V. குமார்- தூண்டில் மீன்
8. சங்கர்- கணேஷ்- யாரோ அழைக்கிறார்கள்
9. G. தேவராஜன்- வாழ்வு மலர்ந்தது
10. இளையராஜா- கிழக்கே போகும் ரயில்
11.ஷியாம்- ஜாதிப்பூக்கள்
12. சந்திரபோஸ்- தரையில் வாழும் மீன்கள்
13.கங்கை அமரன்- ராமாயி வயசுக்கு வந்துட்டா
14. T. ராஜேந்தர்-A.A.ராஜ் - ஒரு தலை ராகம்
15.ஸ்ரீகுமார்- சரிகமப
16. கண்ணன் லதா- புதிய பூவிது
17. T. ராஜேந்தர்- இரயில் பயணங்களில்
18. R. ராமானுஜம்- அன்ன பறவை
19. விஜயரமணி- யாகசாலை
20. ஸ்டாலின் வரதராஜன்- நூலறுந்த பட்டம்
21. L. வைத்தியநாதன்- லாட்டரி டிக்கட்
22. V.S. நரசிம்மன்- யார்
23. தேவேந்திரன்- காலையும் நீயே மாலையும் நீயே
24. K. லக்ஷமிநாராயணன்- சொன்னா நம்மமாட்டீங்க
25. ரவீந்திரன்- ரசிகன் ஒரு ரசிகை
26. மனோஜ்- கியான்- செந்தூரப்பூவே
27. S.A.ராஜ்குமார்- சின்னப்பூவே மெல்ல பேசு
28. சவுந்தர்யன்- சேரன் சோழன் பாண்டியன்
29. கியான் வர்மா- இணைந்த கைகள்
30. A.R. ரஹ்மான்- மே மாதம்
31. S. தாணு- புது பாடகன்
32. வித்யாசாகர்- பசும்பொன்
33. தேவா- சொக்க தங்கம்
34. S.P. வெங்கடேஷ் ( சங்கீதராஜன்)- இதுதாண்டா சட்டம்
35. பரணி- சுந்தரா டிராவல்ஸ்
36. G.V. பிரகாஷ்- கிரீடம்
37. மரகதமணி - தேவராகம்
38. ஸ்ரீகாந்த் தேவா- வெற்றிவேல் சக்திவேல்
39. அருண் கோபன்- அமுதா
40. சன்னி விஸ்வநாத்- வன்முறை
Happy Birthday Jayachandran Sir💖
- Saravanan Natarajan

தசாப்தங்களை கடந்த இசை சாம்ராஜ்யம்...
பாடகர் ஜெயச்சந்திரனின் பாட்டுப்பயணத்தை அவரது பிறந்த நாளில் நான் பட்டியலிட்டுக்கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாடலை பட்டியலில் சேர்த்ததும் நினைவுகள் எங்கோ போயின. ஆனால் அப்போது அந்த பட்டியலிலிருந்து கவனத்தை சிதற விடாமல் இருக்க அந்த நினைவுகளை சற்று தள்ளி வைத்தேன்.
ஆனால் அந்த நினைவுகள் என்னை அவ்வளவு எளிதாக விடுவாதாயில்லை. இன்று அதை பற்றி சொல்கிறேன்....
நான் துபாயில் வசித்து வந்த காலக்கட்டத்தில் வெள்ளிதோரும் இரவு மலையாள பண்பலையில் 'பாட்டின்டே பாழாலி' என்ற நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன். அப்படி வெள்ளிக்கிழமை மாலை எங்காவது வெளிய செல்ல நேரிட்டால், மறுநாள் அதே நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு செய்யப்படும் போது கேட்டுவிடுவேன்.
அந்த நிகழ்ச்சி ஏன் மனதை அந்த அளவுக்கு கவர்ந்ததென்றால் பழைய பாடல்களை, பல அரிய பாடல்களை எடுத்துக்கொண்டு அந்த பாடல் உருவான பிண்ணனியை வெகு சுவாரஸ்யமாக விவரித்து பாடலை ஒலிபரப்புவார்கள்.
ஒரு வெள்ளி இரவு, நான் பாதி தூக்கத்தில் இருந்த போது, நிகழ்ச்சியின் இறுதியாக ஒரு பாடலை அறிமுகப்படுத்தி ஒலிபரப்பினார்கள். அறிமுகத்தை தூக்கக்கலக்கத்தில் சரியாக கேட்கவில்லை. ஆனால் பாடலை கேட்ட போது வியப்பில் விழித்துக்கொண்டேன்...."இது 'அந்த' தமிழ் பாட்டு மாதிரியே இருக்கே" என்று அடையாளம் கண்டு கொண்டேன்.... ஆனால் அதற்கு பிறகு அந்த மலையாள பாடலை கேட்கவேயில்லை...அதை பற்றி விவரங்களும் தெரியவில்லை...
சமீபத்தில் நண்பர் சுந்தர் என்னுடன் ஒரு பாடலை பகிர்ந்திருந்தார்... இரு தினங்களுக்கு பின் தான் அதை கேட்க நேரம் கிடைத்தது. என்ன ஆச்சரியம்- நான் பல வருடங்களாக தேடி கொண்டிருந்த அதே ' ஒரு கான சாம்ராஜ்யம்' மலையாள பாடல்!
மோகனகல்யாணியின் சில இழைகளை கொண்டு நெய்யப்பட்ட ஒரு பழங்காலத்து பட்டாடை! 1953ல் பதிவான பாடல்- இன்றும் நிறம் மாறாத பூவைப்போல மிக அழகாக ஜொலிக்கிறது...
விவரங்களை கொஞ்சம் தேடிப்பார்த்தால் இந்த பாடல் ஒரு திரைப்பாடலல்ல எனத்தெரிய வருகிறது. 1953யில் மேடையேறிய 'நூர்ஜஹான்' என்ற மலையாள நாடகத்திற்காக தட்சிணாமூர்த்தி சுவாமியின் இசையில் உருவான ரம்மியமான ஜோடிப்பாடல். பாடியிருப்பவர்கள் P. லீலா மற்றும் கட்டஞ்சேரி அகஸ்டின் ஜோசெஃப். இந்த ஜோசெஃப் யார் தெரியுமா? K.J. யேசுதாஸின் பெயரில் அந்த 'J'க்கு உரிமையாளர்- ஆம், யேசுதாஸின் தந்தை! பாடலை கேட்டுப்பாருங்கள்- 'வசந்தமும் வந்நு' என்று லீலா அடிக்கோடிடும்போது நம் அடிமனதிலும் வசந்தம் பரவுகிறது...
தட்சிணாமூர்த்தி சுவாமியின் அடிமனதிலும் இந்த ' ஒரு கான சாம்ராஜ்யம்' பாடல் தங்கிவிட்டது போலும். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து 'நந்தா என் நிலா' படத்தில் ஒரு காதல் டூயட் பாடலுக்கு இந்த மெட்டையே பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அந்த மெட்டை அப்படியேவா பயன்படுத்தினார்? இல்லை, அந்த மேதை ஐம்பதுகளில் தான் அமைத்த மெட்டில் எழுபதுகளுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களை செய்து, சிந்தசைஸர் போன்ற நவீன கருவிகளுடன் ஒரு புதுப்பொலிவுடன் நளினமாக மெருகேற்றுகிறார்.
நா. காமராசனை அழைத்து வந்து அந்த பழைய 'ஒரு கான சாம்ராஜ்யம்' பாடலை கேட்கச் செய்து, இந்த புதிய மெட்டையும் வாசித்து காண்பிக்கிறார் சுவாமி. நா. காமராசன் அந்த 'சாம்ராஜ்யத்தை' பற்றிக்கொள்கிறார். 'ஒரு கான சாம்ராஜ்யம்' இப்போது காமராசனின் பேனாவில் ' ஒரு காதல் சாம்ராஜம்' என பிரம்மாண்டமாக விரிகிறது.
எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்-
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்...
கனவென்னும் முடிசூடி கன்னம் கன்னம் சிவந்தாள்....
எப்படிப்பட்ட கண்கள் அவை! ஒரு காதல் சாம்ராஜியத்தையே உருவாக்கும் எழில் படைத்தவை... அந்த காதல் சாம்ராஜியத்தில் கனவுகளால் அலங்கரிக்கப்பட்ட மகுடத்தை சூடி, காதலன் செய்யும் குறும்புகளால் நாணி கன்னம் சிவக்கிறாள்...
இப்படி காமரசம் சொட்டும் காமராசனின் கவித்துவமான வரிகளை பாட ஜெயச்சந்திரனையும் T.K. கலாவையும் அழைக்கிறார் சுவாமி. சரணங்களும் கொள்ளை அழகு! பல்லவியை ஒவ்வொரு முறையும் இரண்டு பேரையும் சேர்த்தே பாடவைக்கிறார் சுவாமி- மன்மதனும் ரதியும் ஒருசேர உலா வருவது போல்....
கேட்டுப் பாருங்கள்:
சுவாமியின் மகள் திருமதி கோமதிஸ்ரீயிடம் இந்த இரு பாடல்களை பற்றி இன்று காலை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன். பாவம், எப்படி தான் என் அன்புத் தொல்லையை பொறுத்து கொள்கிறாரோ!
25 வருட இடைவெளியில் ஒரே மெட்டைச்சார்ந்த இரு வேறு பாடல்கள்... காலங்களை கடந்து நம்மை பார்த்து புன்னகைக்கிறார் சுவாமி....



- Saravanan Natarajan

No comments:

Post a Comment