ஜானகியம்மாவிடமிருந்து மதியம் வாய்ஸ் மெசேஜ் ' அதீ, மருநாட்டு வீரனோ மருதநாட்டு மன்னனோ ஏதோ படம்... அதுல சௌந்தராஜனும் நானும் ஒரு பாட்டு பாடினோம்... சிவாஜி கணேசன் படம்... அது சைனாக்காரன் போல வேஷம் போட்டு பாடற பாட்டு. சைனா பாட்டு போலே... ஆனா சைனா பாட்டு இல்ல, தமிழ் பாட்டு தான்... "ஜீவகன் நான்தான்"ங்கிறத வார்த்தைக்கு ஒவ்வொரு லெட்டர் முன்னாடி ஒரு 'ஹ' சேர்த்திடுவாங்க... 'ஹஜிஹவஹகஹன் ...' அந்த மாதிரி வரும்... அந்த பாட்டு ரெக்கார்ட்ல வந்துதா? படத்தில இந்த பாட்ட கட் பண்ணிட்டாங்க... அப்போ சென்ஸாரு சைனாக்காரனை அவமானப்படுத்தறா மாதிரி இருக்குன்னு சொல்லி இந்த பாட்டை கட் பண்ணாங்க.... அந்த சாங் அதுக்கபுறம் கேட்கவேயில்லை... கேக்கனும் போல இருக்கு... உனக்கு கெடச்சா அனுப்றியா?"
'மருதநாட்டு வீரன்' சிவாஜி கணேசன், ஜமுனா நடித்து 1961ல் வெளியான படம். இசை- பெரியவர் S.V. வெங்கடராமன். பல வருடங்களுக்கு முன் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சானலில் படத்தை பார்த்த போது டைட்டிலில் பிண்ணனி பாடகர்கள் பட்டியலில் TMS, PBS, A.L. ராகவன், P. சுசீலா, ரத்னமாலாவுடன் S. ஜானகியின் பெயரும் இருந்தது. அப்போது ஜானகியின் ஆரம்பகால பாடல்களை வருடவாரியாக சேகரித்து கொண்டிருந்தேன். அதனால் ஆர்வமாக முழு படத்தையும் பார்த்தேன். TMS பாடிய 'பருவம் பார்த்து அருகில் வந்தும்', TMS- சுசீலா பாடிய 'விழியலை மேலே செம்மீன் போல' போன்ற இனிமையான பாடல்கள் இருந்தும் ஜானகி பாடிய எந்த பாடலும் படத்தில் இல்லை. சென்னை ஸ்டீரியோ ஹவுஸ் ரெக்கார்டிங் செண்டரில் இருந்த 'மருதநாட்டு வீரன்' LP ரெக்கார்டில் இருந்து அத்தனை பாடல்களையும் கேஸட்டில் பதிவு செய்துக்கொண்டேன்.... ஆனால் அதிலும் ஜானகி பாடிய பாடல் இல்லை.
பட டைட்டிலில் ஜானகியின் பெயர் இருந்தும் அவர் படத்தில் பாடிய பாடல் என்னவென்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. இன்று ஜானகியம்மா மூலமாகவே இதற்கு விடை கிடைத்தது.
நெட்டில் படம் இருக்கிறது. மதியம் உணவு இடைவெளியில் படத்தை மீண்டும் ஃபார்வர்ட் செய்து செய்து பார்த்தேன். ஒரு கட்டத்தில் தன் காதலி மருதநாட்டு இளவரசி ரத்னாவுக்கு (ஜமுனா) வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்து தலைமறைவாக இருக்கும் ஜீவகன் (சிவாஜி) ஒரு சைனாக்கார ஜோதிடன் வேடத்தில் அரண்மணைக்கு வருகிறான். அந்த கட்டத்தில் தான் யார் என்பதை சூசகமாக ரத்னாவுக்கு உணர்த்துவதற்காக இந்த பாடல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தேன். படத்தில் பாடல் இல்லை.
வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலையில் என் கேஸட்- சீடி சேகரிப்புகளில் மீண்டும் தேட ஆரம்பித்தேன். பாடல் கிடைக்கவில்லை. பிறகு மாடி ஸ்டோர் ரூமில் இருக்கும் அட்டைப்பெட்டி ஞாபகம் வந்தது. அதிலிருந்து கொலாலம்பூர் கொலம்பியாவிலிருந்து பதிவு செய்து வந்த சீடி குவியலை கீழே எடுத்துவந்தேன். சிலவற்றை இதுவரை கேட்கவேயில்லை... பாடல் பட்டியலும் எழுதவில்லை. ஆனால் 'S. Janaki songs from the 50s and 60s' என்று கொலம்பியாவில் பதிவு செய்யச்சொல்லி வாங்கியது ஞாபகம் இருந்தது. ஒவ்வொரு சீடியாக கேட்க ஆரம்பித்தேன்.
ஆறாவது சீடியில் பாடல் அகப்பட்டது! உற்சாகம் பொங்க பாடலை பதிவேற்றினேன்.
https://youtube.com/watch?v=hUYaMeYY9eE&feature=shared
உடனே ஜானகியம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து அழைப்பு 'Thank youன்னு சொன்னா போதாது கண்ணா....' என்று சொல்லி நிறுத்தி 'God bless you!' என்று அன்பொழுக முடித்தார்...
She left me choked with emotion, as always...🙏
- Saravanan Natarajan
No comments:
Post a Comment