dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Friday, July 3, 2026

Varuvai Manamohana

 வருவாய் மனமோகனா....

ஓடி வருவாய் மனமோகனா...🎵


தன்னிடம் நடனம் பயிலும் ஒரு மாணவியை வசியப்படுத்தி தன் ஆசை வலையில் சிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு கயவன். தயக்கங்கள் இருந்தபோதும் அந்த டான்ஸ் மாஸ்டர் ஒரு நல்லவன் என் நம்பி அவன் செய்யும் குறும்புகளை ரசிக்கும் அந்த பெண். 


இந்த கட்டத்தில் அவன் கற்றுக்கொடுக்க அவள் ஒரு பாடலை பாடி ஆடுகிறாள்.


இது தான் 1953ல்  வெளிவந்த TKS சகோதரர்களின் ' இன்ஸ்பெக்டர்' படத்தின் 'வருவாய் மனமோகனா' பாடலின் பின்னணி. (தமிழகத்தில் நாடக கலை தழைத்து வளர்ந்ததில் அவ்வை T.K. சண்முகம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவரது 'எனது நாடக வாழ்க்கை' புத்தகத்தை பல முறை ரசித்து படித்திருக்கிறேன். எத்தனை மெனக்கெடல், கடின உழைப்பு!  அவரது கலை சேவையை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்) 


கவிஞர் மருதகாசியின் அழகான வரிகள் பெரியவர் G. ராமனதனின் ரம்மியமான சிம்மேந்திர மத்தியமத்தில் எவ்வளவு சௌக்கியமாக அமர்கின்றன. 


நடுநடுவே அந்த மாஸ்டரின் ( T.K. சண்முகம்) நகைச்சுவையான குறுக்கீடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.


"உன் வரவை எதிர்பார்த்து துடியாய் துடிக்கும் எம்முன் வருவாய் மனமோகனா..."🎵


- "துடிப்பு வரலையே! Faceல துடிப்பு வரவேண்டாம்? அப்படியே புழுவைப்போல துடிக்கணும்மா!"💁‍♂️


"விரகத்தீயினால் சறுகாய் எனது உடல் கருகும்முன்னே...."🎵


- "உடம்பு கருகலையே! அப்படியே தானே இருக்கு!"💁‍♂️


"பருவ காலம் அல்லவோ...."🎵


- "பருவ காலம் வார்த்தையிலே தானே இருக்கு! அது பாவத்துல வந்து அப்படியே பார்க்கிறவங்க உயிரைப் போய் தொட வேண்டாம்?!"💁‍♂️


கடைசியில் "தருக" என்று எப்படி கெஞ்ச வேண்டும் என்பதற்கு வாத்தியார் குறிப்பிடும் உதாரணங்கள்- Scintillating 😃


MLVயுடன் மாஸ்டருக்காக பின்னணி பாடுபவர் V.N. சுந்தரம். நாடக கம்பெனியிருந்து திரைத்துறைக்கு வந்தவர். முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் சில படங்களில் நடித்தார். பிறகு ஐம்பதுகளில் பின்னணி பாடகராக உறுவெடுத்து தன் அருமையான குரல்வளத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மணமகள் படத்தில் MLVயுடன் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை இசைத்தது  இவரே. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் சிவாஜிக்காக 'வெற்றிவடிவேலனே' என்று பரவசமாக பாடியதும் இவரே. 2006-07 வாக்கில் அவரை மயிலாப்பூர் மாடவீதியில் எளிமையான தோற்றத்தில் நடந்து செல்வதை ஒரு முறை பார்த்தேன்.  2008ல் நண்பர் ஒருவர் மூலம் அவரது முகவரி கிடைத்தது. நான் துபாயில் இருந்த காலக்கட்டம். அடுத்த வருடம் சென்னை வரும்போது அவரை சந்திக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். Man proposes, but God.....? 2009ல் நான் இந்தியா வந்தபோது சுந்தரம் இந்த உலகிலேயே இல்லை.... 


இந்த பாடலில் சுந்தரத்தின் சௌந்தரிய விலாசங்கள் பளிச்சிடுகின்றன. எத்தனை சரளமாய் சங்கதிகள் வந்து விழுகின்றன! What an abundance of talent! So sadly under-utilized!


வசந்குமாரியை பற்றி என்ன சொல்வது! ஒவ்வொரு வரியிலும் லாவகமாக எண்ணிலடங்கா சங்கீத சூட்சமங்களை தெறிக்கிறார். ராகமும் பாவமும் தாளமும் வியப்போடு அவரின் குரல் கட்டுக்குள் அடங்கி அசைகின்றன. 


https://youtu.be/3LhBhdl7j68?feature=shared


தமிழ் திரையிசை பெற்ற பெரும் பேறு அதன் ஆரம்பகாலத்தில் M.S. சுப்புலட்சுமி, M.L. வசந்தகுமாரி, D.K. பட்டம்மாள், N.C. வசந்தகோகிலம் போன்ற உன்னதமான இசை விற்பன்னர்கள் இசைத்த திரைப்பாடல்கள். 


அதுவும் ஐம்பதுகள் தோறும் வசந்தகுமாரி பாடிய திரைப்பாடல் தொகுப்பு தமிழ் திரையிசை வரலாற்றின் மிக அழகான அத்தியாயம். C.R. சுப்புராமன் தொடங்கி G. ராமநாதன், S.M. சுப்பையா நாயுடு, சுதர்சனம், C.N. பாண்டுரங்கன், கோவிந்தராஜுலு நாயுடு, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, வேதா போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் வசந்தகுமாரியை கொண்டு உருவாக்கிய வகைவகையான, சவாலான பாடல்கள் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்.


நேற்று வசந்தகுமாரியின் பிறந்த நாளுக்காக எழுத நினைத்த பதிவு. ஏதோ ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அதைப்பற்றி எழுதுவதற்காக நான் தேடித்தேடி சேகரித்து பதிவு செய்துக்கொண்ட அவரது திரைப்பாடல்கள் கொண்ட நான்கு CDக்களை கேட்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான்... மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்துவிட்டேன்.


அதனால் என்ன.... MLV யை போன்ற கலைஞர்களை எந்த நாளும் கொண்டாடலாம் 🙏


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/18ua4nNCSN/

மருதநாட்டு வீரன் Marudha Naattu Veeran

 ஜானகியம்மாவிடமிருந்து மதியம் வாய்ஸ் மெசேஜ் ' அதீ, மருநாட்டு வீரனோ மருதநாட்டு மன்னனோ ஏதோ படம்... அதுல சௌந்தராஜனும் நானும் ஒரு பாட்டு பாடினோம்... சிவாஜி கணேசன் படம்... அது சைனாக்காரன் போல வேஷம் போட்டு பாடற பாட்டு. சைனா பாட்டு போலே... ஆனா சைனா பாட்டு இல்ல, தமிழ் பாட்டு தான்... "ஜீவகன் நான்தான்"ங்கிறத வார்த்தைக்கு ஒவ்வொரு லெட்டர் முன்னாடி ஒரு 'ஹ' சேர்த்திடுவாங்க... 'ஹஜிஹவஹகஹன் ...' அந்த மாதிரி வரும்... அந்த பாட்டு ரெக்கார்ட்ல வந்துதா? படத்தில இந்த பாட்ட கட் பண்ணிட்டாங்க... அப்போ சென்ஸாரு சைனாக்காரனை அவமானப்படுத்தறா மாதிரி இருக்குன்னு சொல்லி இந்த பாட்டை கட் பண்ணாங்க.... அந்த சாங் அதுக்கபுறம் கேட்கவேயில்லை... கேக்கனும் போல இருக்கு... உனக்கு கெடச்சா அனுப்றியா?"


'மருதநாட்டு வீரன்' சிவாஜி கணேசன், ஜமுனா நடித்து 1961ல் வெளியான படம். இசை- பெரியவர் S.V. வெங்கடராமன். பல வருடங்களுக்கு முன் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சானலில் படத்தை பார்த்த போது டைட்டிலில் பிண்ணனி பாடகர்கள் பட்டியலில் TMS, PBS, A.L. ராகவன், P. சுசீலா, ரத்னமாலாவுடன் S. ஜானகியின் பெயரும் இருந்தது. அப்போது ஜானகியின் ஆரம்பகால பாடல்களை வருடவாரியாக சேகரித்து கொண்டிருந்தேன். அதனால் ஆர்வமாக முழு படத்தையும் பார்த்தேன். TMS பாடிய 'பருவம் பார்த்து அருகில் வந்தும்', TMS- சுசீலா பாடிய 'விழியலை மேலே செம்மீன் போல' போன்ற இனிமையான பாடல்கள் இருந்தும் ஜானகி பாடிய எந்த பாடலும் படத்தில் இல்லை. சென்னை ஸ்டீரியோ ஹவுஸ் ரெக்கார்டிங் செண்டரில் இருந்த 'மருதநாட்டு வீரன்' LP ரெக்கார்டில் இருந்து அத்தனை பாடல்களையும் கேஸட்டில் பதிவு செய்துக்கொண்டேன்.... ஆனால் அதிலும் ஜானகி பாடிய பாடல் இல்லை. 


பட டைட்டிலில் ஜானகியின் பெயர் இருந்தும் அவர் படத்தில் பாடிய பாடல் என்னவென்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. இன்று ஜானகியம்மா மூலமாகவே இதற்கு விடை கிடைத்தது. 


நெட்டில் படம் இருக்கிறது. மதியம் உணவு இடைவெளியில் படத்தை மீண்டும் ஃபார்வர்ட் செய்து செய்து பார்த்தேன். ஒரு கட்டத்தில் தன் காதலி மருதநாட்டு இளவரசி ரத்னாவுக்கு (ஜமுனா) வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்து தலைமறைவாக இருக்கும் ஜீவகன் (சிவாஜி) ஒரு சைனாக்கார ஜோதிடன் வேடத்தில் அரண்மணைக்கு வருகிறான். அந்த கட்டத்தில் தான் யார் என்பதை சூசகமாக ரத்னாவுக்கு உணர்த்துவதற்காக இந்த பாடல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தேன். படத்தில் பாடல் இல்லை. 


வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலையில் என் கேஸட்- சீடி சேகரிப்புகளில் மீண்டும் தேட ஆரம்பித்தேன். பாடல் கிடைக்கவில்லை. பிறகு மாடி ஸ்டோர் ரூமில் இருக்கும் அட்டைப்பெட்டி ஞாபகம் வந்தது. அதிலிருந்து கொலாலம்பூர் கொலம்பியாவிலிருந்து பதிவு செய்து வந்த சீடி குவியலை கீழே எடுத்துவந்தேன். சிலவற்றை இதுவரை கேட்கவேயில்லை... பாடல் பட்டியலும் எழுதவில்லை. ஆனால் 'S. Janaki songs from the 50s and 60s' என்று கொலம்பியாவில் பதிவு செய்யச்சொல்லி வாங்கியது ஞாபகம் இருந்தது. ஒவ்வொரு சீடியாக கேட்க ஆரம்பித்தேன். 


ஆறாவது சீடியில் பாடல் அகப்பட்டது! உற்சாகம் பொங்க பாடலை பதிவேற்றினேன். 


https://youtube.com/watch?v=hUYaMeYY9eE&feature=shared


உடனே ஜானகியம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து அழைப்பு 'Thank youன்னு சொன்னா போதாது கண்ணா....' என்று சொல்லி நிறுத்தி 'God bless you!' என்று அன்பொழுக முடித்தார்... 


She left me choked with emotion, as always...🙏


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1D8G7rvNEw/

Thursday, July 2, 2026

MLV BIRTHDAY

 மகாவிதுஷி M.L.வசந்தகுமாரியின் பிறந்த நாள் இன்று. ஒரு காலத்தில் அவர் பாடிய திரைப்பாடல்களை தேடித்தேடி சேகரித்தேன்... பல கேஸட்களிலும் CDக்களிலும் அவற்றை பதிவு செய்தேன்....


'எல்லாம் இன்ப மயம்', 'ஆடாத மனமும் உண்டோ', 'ஆடல் காணீரோ', 'பாற்கடல் அலை மேலே', 'அந்தி மயங்குதடி', 'ஆடும் அருள் ஜோதி' போன்ற எண்ணற்ற பாடல்களில் அவரின் ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். அதே வேளையில் 'கூவாமல் கூவும் கோகிலம்', 'வஞ்சமிதோ வாஞ்சையிதோ', 'மஞ்சள் வெய்யில் மாலையில', 'எங்கே மறைந்தனையோ', 'கனியோ பாகோ கற்கண்டோ', 'சின்னஞ்சிறு கிளியே' போன்ற பாடல்களில் காட்சியின் சூழ்நிலைக்கேற்ப MLV மென்மையாக , மெல்லிசையாக உருமாறி ஒலித்தது மிக அழகு. 


'ஐயா சாமி ஆவோஜி சாமி', 'வருவாய் மனமோகனா' போன்ற பாடல்களில் துள்ளலாய் ஒலித்தது MLVயின் குரல் என்று உணர்ந்த போது அதிசயமாக இருந்தது.  


அதுப்போல இந்த பாடல்...Waltz style லில் எவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது-மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணந்து இசையமைத்த முதல் படம்....சிவாஜி கணேசன்-பத்மினி இணைந்து நடித்த முதல் படம்.... கலைவாணர் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "பணம்" படத்திலிருந்து...


முதல் படத்திலேயே எவ்வளவு வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்! Dainty, delightful arrangements. 


இந்த பாடலுக்கு MLVயை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்! அவரும் எப்படி நளினமாக இசைக்கிறார்.... classy, elegant and so stylish! 


MLVயுடன் பாடுவது.... G.K.வெங்கடேஷ்!


https://www.youtube.com/watch?v=3o-ZJpoEzAc


#songpostsfromme


- Saravanan Natarajan


https://www.facebook.com/share/p/1BfGL3qxuE/

Wednesday, July 1, 2026

AM Rajah birthday

 ‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த  தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள்.  கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..


நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!


தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.


'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.


“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’


கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும்.  “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”


இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி,   “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.


பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').

இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”


“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.


வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.

பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு! 


“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி) 


அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு)  “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா) 


‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..”  பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”


ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..” 


எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்)  சேர்ந்து பாடியவர்.  ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை… 


ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி. 


ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு) 


.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..”  “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)


Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”  


“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்!  'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!

‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.


சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்)  “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)


ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய  “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள். 

மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர் ஈ. எம். ராஜா. தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். 


இழந்தது நாம்.


Janarthanan KB 


https://www.facebook.com/share/1C9NECMTJ2/