அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள்
யார் தந்தது 
சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று. அவரின் இசைப்பயணத்தை தூள் தளத்தில் நெடுந்தொடராக 2017ல் பதிவிட்டேன். அவரை 2010ல் சந்தித்ததை பற்றியும் அவருடன் அவரின் பாடல்களை பற்றி ரசனைகளை பகிர்ந்ததை பற்றியும் கூட விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.
பின்- எழுபதுகளிலும் எண்பதுகளிலும் திரைப்பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தங்கள் இதயங்களில் சந்திரபோஸுக்கு நிச்சயமாக ஓர் தனியிடம் ஒதுக்கியிருப்பார்கள்.
இளையராஜா விஸ்வரூபம் எடுத்து தமிழ் திரையிசையை ஆண்டு வந்த காலகட்டங்களில் சந்திரபோஸும் கிடைத்த படங்களிலெல்லாம் அழகான பாடல்களை தந்துக்கொண்டிருந்தார்.
ஏவிஎம், பாலாஜி, குகநாதன் போன்ற பெரிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார். அந்த படங்களின் பாடல்கள் எல்லோரும் அறிந்ததே. அந்த 'மசாலா' படங்களுக்கு தேவையான துள்ளல் பாடல்களை வஞ்சனையின்றி கொடுத்த அதே வேளையில் அதே படங்களில் ஓரிரு அற்புதமான மெலடி பாடல்களையும் சேர்க்க தவறவில்லை சந்திரபோஸ்.
இவைகளை தாண்டி என் மனதில் சந்திரபோஸ் என்றால் நினைவில் வருபவை அதிக விளம்பரம் இல்லாமல் வந்த சின்ன-பட்ஜெட் படங்கள் அல்லது வந்த சுவடு தெரியாமல் தோல்வி அடைந்த படங்களில் சந்திரபோஸ் அமைத்த அற்புதமான பாடல்கள்.
'ராஜாத்தி ரோஜாக்கிளி' என்றொரு படம். அதில் யேசுதாஸ்- ஜானகி பாடிய 'ஓடையின்னா நல்லோட' பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை மயிலிறகால் தடவித்தருவது போல் ஒரு இதம் நம்மை ஆட்கொள்ளும். அதே படத்தில் 'யாரோ..மன்மதன்' பாடலை பாடியப்பின் SPB சந்தோஷத்தில் சந்திரபோஸை கட்டித்தழுவினாராம்.
'எங்கள் தாய்குலமே வருக' என்ற படத்தில் 'வான் வந்து தேன் சிந்தும் நேரம்' பாடலை இதைவரை நீங்கள் கேட்டதில்லை என்றால் தயவுசெய்து உடனே கேளுங்கள். 'கோயில் யானை' படத்தின் 'பூவே தாழம்பூவே' பாடலில் SPBயும் ஜானகியும் செய்யும் குறும்புகளில் கிறங்கி கிடப்பதில் தான் எத்தனை சுகம்! 'மாதவி வந்தாள்' படத்தின் 'மாலை முத்து மாலை' பாடலில் சுசீலாவின் குரலினிமைகள் எவ்வளவு அழகாக வெளிப்படுகின்றன! 'மாமியார்கள் ஜாக்கிரதை' படத்தில் SPB பாடிய 'விழிகளே விழிகளே' பாடலை கேட்டால் புரியும் சந்திரபோஸின் உன்னதம்.
'காளிச்சரண்' படத்தின் ' தொடலாம் தொட்டாலும் யோகம் தான்' பாடலை அந்த படம் வந்துப்போன பல வருடங்களுக்கு பிறகும் வாணிமா முனுமுனுத்ததை நான் கேட்டிருக்கிறேன். 'இது எங்கள் ராஜ்ஜியம்' படத்தின் 'தங்க கொலுசு' பாடலும் 'பொண்ணு புடிச்சிருக்கு ' படத்தின் 'ஆவணி மாசம் பொறக்கட்டும்' பாடலும் நிச்சயமாக மலேசியா வாசுதேவனின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம்பெறும்.
'கரையை தொடாத அலைகள்' என்றொரு படம். பழம்பெரும் இயக்குனர் P. மாதவன் தன் மகன் அருணை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்த படம். ரசிகர்களில் மனதை தொடாமல் சென்றுவிட்டது. ஆனால் அதில் SPB பாடிய இரு பாடல்கள்- காதலின் குதூகலத்தை குறும்பாக சொல்லும் 'மாவெடுத்து பூக்கோலம்' மற்றும் காதல் தோல்வியை விரக்தியோடு சொல்லும் 'பூ பறிக்கும் நேரத்திலே' மனதை தொட்டது.
'காலமெல்லாம் உன் மடியில்' படத்தை பலர் மறந்திருக்கலாம்... ஆனால் அதன் 'மன்மத ஓடங்களே' மற்றும் 'கார்மேகம் ஊர்கோலம் போகும்' பாடல்களை மறக்க முடியுமா? 'செல்வாக்கு' படத்தில் 'இளமையின் நினைவுகள் ஆயிரம்' என்று ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடுவதை கேட்கும்போதெல்லாம் கனவில் மிதப்பதுப்போல் இருக்கும். 'வடிவங்கள்' படத்திற்காக 'நிலவென்ன பேசுமோ... இளங்காற்று வீசுமோ... விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…' என்ற பாடலில் சந்திரபோஸின் குரல் செவியில் விழுந்த கணம் இதயத்தை போய் துளைக்கும்.
இவைகளை போல ஒரு மிக இனிமையான பாடலொன்றை இன்று கேட்கலாமா? 1988ல் வலம்புரி ஜான் இயக்கத்தில் வெளிவந்த 'அது அந்த காலம்' படத்திலிருந்து. வலஜி ராகத்தின் சுகங்களை ஸ்வரங்களும் சாகித்யமுமாய் என்ன ஒரு இசைவிருந்து படைத்திருக்கிறார் சந்திரபோஸ்! யேசுதாஸும் வாணி ஜெயராமும் அற்புதமாய் பாடியிருக்கிறார்கள். ஒரு முறை வாணிமாவிடம் இந்த பாடலை நான் நினைவுக்கூர்ந்த போது, பரவசத்தில் அவர் கண்களில் சிறு துளிகள் எட்டி பார்த்தன...
அது... அந்த காலம்...