dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Sunday, December 7, 2025

A Tribute to L R Easwari

சௌந்தர ராஜேஸ்வரி 💖
Part #2
TMS- L.R. ஈஸ்வரி இணைவில் மற்றுமோர் வகை பாடல்கள்- TMS வரிகளை பாட, ஈஸ்வரி ஹம்மிங் மட்டுமே செய்த மாயாஜாலங்கள். வெறும் ஹம்மிங்கா அது... பாடலின் அடிநாதமாய், ஆத்மாவாய் ஊடுருவி ஆணித்தரமாய் நம் நெஞ்சில் பாய்ந்து, புலப்படாத ஒரு தவிப்பில் நம்மை தாக்கும்.... leaving us in a wistful delirium.... "வீடு வரை உறவு... வீதி வரை மனைவி" பாடலில் "தொட்டிலுக்கு அன்னை... கட்டிலுக்குக் கன்னி" என்று TMS தத்துவங்களை முழங்கும்முன் "ல்லலாயி ஆரிரோ" என்று ஈஸ்வரியின் அந்த தாலாட்டை- (பத்து- பதினைந்து நொடிகள் மட்டுமே வரக்கூடியது)- மறக்க முடியுமா?
கண்ணதாசனோ வாலியோ கவிதையாய் வடித்திருப்பார்கள்.... விஸ்வநாதன்- ராமமூர்த்தியோ மகாதேவனோ இழையிழையாய் இன்னிசையை வார்த்திருப்பார்கள், சௌந்தரராஜனோ ஒவ்வொரு சொல்லுக்கு உரிய மரியாதை அளித்து, தானும் ரசித்து, அழகான சுநாதாமாய் பாடுவார், ஒரு தேர்ந்த சிற்பியாய் ஒவ்வொரு வரியையும் அழுத்தமாக, அழகாக செதுக்கி ஒரு இசைச்சிலையை எழுப்புவார்.... இவர்களெல்லாம் தங்கள் பணியை செய்துவிட்டு காத்திருக்க, ஈஸ்வரி அங்கு வருவார்... அந்த சிலை சிலிர்த்துக்கொண்டு உயிர் பெறும்....
* * * * *
'கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா' வை எடுத்துக்கொள்ளுகள்... மாயமாளவகௌளையில் மெல்லிசை மன்னர்கள் தொடுத்த மாயமாலை...( இதே மலரைக்கெண்டு இளையராஜாவின் 'இங்கே நான் கண்டேனும்' ரகுமானின் 'சொல்லாயோ சோலைக்கிளியும்' தனித்தனி அழகுடன் மயக்கும் பாமாலைகள்). சௌந்தரராஜனை தவிர வேறு பாடகரை இந்த பாடலுக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கண்ணதாசனின் காவிய வரிகள்.... ஆஹா! அவரது கற்பனையில் வலம் வந்த சீதையும் சகுந்தலையும் அமராவதியுமாய் ஈஸ்வரி!
கீழ் தளத்தை வலுவாக அமைத்து, படிப்படியாக மேலே சஞ்சரிப்பார்...மூன்றாம் தளத்தை அடைந்து அவர் அந்த ஹம்மிங்கை முடிக்கும் போது மனம் தவியாய் தவிக்கும்... like an elusive will-o'-wisp, she taunts and teases and remains an ethereal spirit who torments her besotted lover into a delightful agony....
இவ்வளவு செய்தும், 'ஆலயமணி' பட டைட்டிலில் L.R. ஈஸ்வரியின் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்.... ஒரு வேளை வெறும் ஹம்மிங்க் தானே என்ற எண்ணமோ என்னமோ! Oh, the ignoramuses!
* * * * *
அடுத்து 'அன்னை இல்லத்திற்கு' ஒரு விஜயம்! வரிகளை முதலில் எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டை அமைப்பது தான் திரையிசை திலகம் K.V. மகாதேவனின் வழக்கம். ஒரு இளைஞன் தன் காதலியின் அழகை பெருமையுடன், காதல் வயப்பட்டதை வியப்புடன், பிறகு நான்கு சுவர்களுக்குள் நடந்ததை சற்றே சற்று நாணத்துடன் தன் நண்பனிடம் பகிரும் பாடல்....
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது....
ஆஹா....கவிநயம் சொட்டும் காதல் வரிகள், அந்த வரிகளை முன்னிறுத்தி மகாதேவன் அமைக்கும் மெட்டு, தானே காதல்வயப்பட்டது போல் பரவசமாக ஆர்ப்பரிக்கும் TMS....அவர் கொண்டாடும் அந்த நாயகி- இரண்டாவது இடையிசையில் சற்று தாமதமாக வந்து சேரும் L.R. ஈஸ்வரி.... அந்த 'ஹாஹா' ஆஹா!
இரண்டாவது, மூன்றாவதாக இடையிசையை ஆக்கிரமிக்கிறது ஈஸ்வரியின் வெவ்வேறான ஹம்மிங்.
பாடல் காட்சியில் தேவிகா வருகிறார், சிவாஜியின் மனக்கண்ணில். இரண்டாவது இடையிசையில் ஈஸ்வரியின் ஹம்மிங் மறைய, TMS பாடும் வரிகள்-
காலளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்...
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்....
அவள் சொல்லாமல் சொன்ன ரகசியங்களை, மூடிமறைத்து, இலைமறை காயாக விவரிக்கிறான் அவன். அவள் நினைவுப்படுத்திய அத்தனையையும் அவன் எப்படி சொல்வான்? கூட பிறந்த சகோதரனாகவே இருக்கட்டும், உயிர்த்தோழனாகவே இருக்கட்டும், அந்தரங்கம் என்று ஒன்று உள்ளதல்லவா....
ஆனால் அந்த 'துன்பம் போன்ற இன்பத்தை' TMS விவரிக்க தேவையில்லாமல், தன் ஹம்மிங்கிலேயே ஈஸ்வரி அந்த பரிதவிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் உணர்த்திவிடுகிறாரே! எப்பேர்ப்பட்ட வித்தகி!
இந்த பாடல் நினைவுக்கும் கனவுக்குமிடையே உள்ள தாழ்வாரத்தை அலங்கரிக்கும் ஒரு தோரணம்... நினைவாக TMS.... கனவாக ஈஸ்வரி....
* * * * *
மூன்று வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் எழுத்தாளன் சேகர், மிகுந்த ஆவலுடன் தன் காதலி உமாவை தேடுகிறான். விழுகிறது பேரடி! உமா உயிருடன் இல்லை என்ற செய்தியை கேட்டு நிலை குலைந்து போகிறான்....
இந்த இழப்பு சோகம்... ஆறுதல் ஏதுமில்லா பெரும்சோகம். விரக்தியின் விளிம்பில் நின்று, இந்த துயரத்தை ஏற்படுத்திய இறைவனை அழைத்து 'இப்படி செய்து விட்டாயே!' என்று குமுறுகிறான்...
இந்த குமுறலை கண்ணதாசன் மிக அழகான கவிதையாய் வடிக்கிறார். அந்த வரிகளை ஏந்தி வர K.V. மகாதேவன் அமைக்கும் மென் மெட்டு.... கண்ணீர் துளிகளை ஜரிகை கீற்றுகளாக தைத்துக்கொண்ட ஒரு வெண்பட்டு!
"ஏட்டில் எழுதி வைத்தேன்...
எழுதியதை சொல்லி வைத்தேன்...
கேட்டவளை காணோமடா இறைவா...
கூட்டிச்சென்ற இடமேதடா...?"
துக்கத்தையும் ஏக்கத்தையும் தேக்கி வைத்த குரலில் TMS பாடும்போது பாறையிலும் நீர் சுரக்கும். இவரை பாடகராய் பெற நாம் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும்!
ஈஸ்வரி... அடடா.... பாடலின் தொடக்கத்திலும் முதல் இடையிசையிலும் மட்டுமே இடம்பெறுகிறது அவரது ஹம்மிங்.... ஆனால் அவர் பாடல் நெடுகிலும் வியாபித்திருப்பது போல் ஒரு மாயை! காலஞ்சென்ற உமாவாக, காலன் அமைத்த மூடுபனி திரையை ஒரு நொடி விளக்கி அவனுக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் மறைந்துபோகும் உருவமாக, வாஞ்சையுடன் வாரியணைத்துவிட்டு விடைபெறுகிறார் இந்த வானம்பாடி....
ஆனால் இந்த வானம்பாடி பறந்து சென்ற பிறகும் அந்த மாயம் நம் செவிகளை விட்டு அகலவில்லை.... புயல் கடந்த பூமியைப் போல மனதில் ஒரு வெறுமை.... A tour de force performance!
* * * * *
இறுதியாக இந்த முகலாய மயக்கம்... மும்தாஜின் பேரழகில் மயங்கி ஷாஜஹான் பாடும் பாடல்...
ராஜநடையுடன் கம்பீரமான MGR. அழகே உருவான K.R. விஜயா.
"பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்..."
என்று எழுதுகிறார் வாலி, விஜயாவுக்கு 'புன்னகை அரசி' என்ற பெயர் வர பல வருடங்கள் முன்னரே! அரேபிய இசை வண்ணங்களில் தூரிகையை தோய்த்து மெல்லிசை மன்னர்கள் எழுதிய ஓவியம்.
தாஜ் மஹாலின் நான்கு மினாரெட்டுகளுடன் ஐந்தாவது மினாரெட்டாக உயர வீற்றிருக்கிறார் ஈஸ்வரி. சலவைக்கல்ப்போல வழவழப்பாக கனவுலகில் மிதக்கும் அந்த ஹம்மிங்! கவிஞர் வாலியையும், மெல்லிசை மன்னர்கள்களையும், ஏன் TMSசைக்கூட மறக்கடிக்க செய்யும் ஈஸ்வரியின் இந்த மாயாஜாலம்! பாடல்வரிகளையே பாடாமல் பாடலின் அடிநாதமாய் நிற்கிறார் அவர். காதலனை ரகசியமாக, கதகதப்பாக கட்டியணைப்போது போல் ஹம்மிங்கின் ஒவ்வொரு நோட்டையும் நெருக்கமாக, அணுக்கமாக ரசித்து ரசித்துப் பாடுகிறார்...
She laces the layers with lascivious longing....
"பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும்...."
சொல்லாத வார்த்தையையே பண்ணாக்குகிறார் இந்த பாமகள்!
Happy Birthday Easwarimma!
Part 1 here:
- Saravanan Natarajan