dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Saturday, September 5, 2026

THENARUVIYIL - AGAYA GANGAI

 🎵தேனருவியில் நனைந்திடும் மலரோ...🎵

பாரதிராஜாவிடம் நான்கைந்து வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்து விட்டு மனோபாலா முதல் முதலில் இயக்கிய படம் 'ஆகாய கங்கை' (1982). பாரதிராஜாவுடன் இருந்த போது மனோபாலாவுக்கு அறிமுகமான  கார்த்திக், சுஹாசினி, உஷா (ராஜேந்தர்), வடிவுக்கரசி, கவுண்டமணி, கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஒரு வித்தியாசமான காதல் கதை... தயக்கங்களாலும் குழப்பங்களாலும், மௌனங்களாலும் மோதல்களாலும் அடிப்பட்டு, மிதிப்பட்டு, ச்சீ வேண்டாமென்று தூர எறியப்பட்ட காதல், செத்துப்பிழைத்து மீண்டும் மலர்வதுதான் கதைக்களம். ஆனால் 'Chai With Chitra' வில் மனோபாலா ஒத்துக்கொண்டது போல் மணிவண்ணனின் கதை,  திரைக்கதையில் பாக்கியராஜின் பங்களிப்பு எல்லாம் இருந்தும் கதையமைப்பில் குறைகள் இருந்ததால் படம் தோல்வி அடைந்தது. 

வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிய இந்த 'ஆகாய கங்கை' படம் இன்றும்  நம் நினைவில் நிற்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம்- நம் இளையராஜாவின் இன்னிசை. அதுவும் இந்த பாடல்... ஆஹா... 

நான் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்ததுப்போல் SPB- ஜானகியின் duetகளில் அவ்விரண்டு பேர்களின் வித்தியாசமான பங்களிப்பு கொண்ட பாடல்களில் இதுவுமொன்று. இதில் பாடல்வரிகளை SPB மட்டுமே பாடுகிறார். (கடைசியில் மட்டும் ஜானகி பல்லவி வரிகளை பாடுகிறார்).

SPB ஆரம்பித்து கொடுக்கும் ஜதிகளை ஜானகி பற்றிக்கொள்கிறார்.... பற்றிக்கொள்கிறார்! ஜதிகளும் ஆலாபனைகளுமாய் பாடல் பயணிக்கும் பாதைகளெங்கும் சுர சுடர்களாய் மின்னுகிறார் இந்த வித்தகி...❤️‍🔥💥🔥

ராஜாவின் அலாதி கற்பனையில் சுத்த தன்னியாசியும் பாகேஷ்ரியும் தேன் அருவிகளாய் கலந்து பொழிகின்றன... 🌊🎵

காதலனின் தவிப்பையும், ஏக்கத்தையும், குழப்பத்தையும், கெஞ்சலையும் கொஞ்சலையும் பாடல் வரிகள் பிரதிபலிக்க வேண்டும். பண்ணோடும் புலமையோடும் பொருத்தமான வரிகள் மெட்டுக்குள் அழகாக வந்து அமர்கின்றன. கமல்ஹாசனும் பாலகுமாரனும் இளையராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த ஒரு கவிஞர் முதல் முதலில் ராஜாவுக்கு எழுதிய பாடலிது.

'நீ நிலவோ... ஏன் தொலைவோ' என்று அந்த கவிஞர் எழுதியிருந்ததை இளையராஜா 'ஏன் தொலைவோ... நீ நிலவோ?' என்று மாற்றினாராம். ( அந்த 'தொலைவோ' வில் SPBயின் சினுங்கலான அழுத்தம் நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள 384,400 கி.மி. தூரத்தை அளவெடுக்கிறது!)🌛🥰

ராஜாவுடன் தனக்கேற்பட்ட அந்த முதல் அனுபவத்தை அந்த கவிஞர் இப்படி நினைவுக்கூர்கிறார்....

'காதலியின் இதயத்தை புரிந்து கொள்ள இயலாமல் காதலன் தடுமாறும் கதை. பதிலை எதிர்பார்க்கும் படையெடுப்பே பாட்டாகிறது. இன்னிசை இமயம் இளையராஜா அவர்களுடைய அற்புதமான இசை, செவி வழி பாய்ந்து நரம்புகளில் ஊடுருவி ஒரு மந்திரக்கோல் போன்று மனதை வசியப்படுத்திக் கொண்டிருந்த அந்த இசையை அசை போட்டு பாடலை எழுதி முடித்தேன். மறுநாள் இளையராஜா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். பாடல் நன்றாக வந்திருப்பதாக பாராட்டி விட்டு 'நீங்கள் எழுதியிருந்ததில் ஒரே ஒரு சின்ன திருத்தம் மட்டும் செய்திருக்கிறேன்' என்றார். 'நீ நிலவோ' என்பது உவமையாகவும் 'ஏன் தொலைவோ' என்பது ஒரு கேள்வியாகவும் தனித்தனியே நிற்கிற மாதிரி அமைந்திருந்தது. இளையராஜா செய்திருந்த திருத்தமோ உவமைக்குள் ஒரு கேள்வியும் உள்ளடக்கி இரண்டையும் ஒன்றாக இணைத்திருந்தது. ஓர் இசையமைப்பாளரின் உள்ளே இருந்த கவிஞர் ஒருவரை கண்டு கொண்டேன்' 

அந்த கவிஞர்- இன்று பிறந்த நாள் காணும் திரு. மு. மேத்தா ❤

https://www.youtube.com/watch?v=BEwSlbvRYwc

- Saravanan Natarajan

#SPBJanakiuniqueduets 

https://www.facebook.com/saravanan.natarajan.319/posts/pfbid03241ChZWbj1RkBPeTuu47FHeY8P7L5PA8GJ1ouYLgv2wEzHyPkBiHKQfwia7NddWfl

No comments:

Post a Comment