ஒரு பாடல்ரசிகனின் பரிதாபங்கள் #16
🎵நாலுப்பக்கம் வேடருண்டு🎵
போன வெள்ளிக்கிழமை மாலை நண்பர் பிரசன்னாவின் அழைப்பின் பேரில் நண்பர் ஸ்ரீதர் வுட்லேன்ட்ஸ் ரெஸ்டாரென்ட்டில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்களின் சந்திப்பு. அற்புதமான மாலைப்பொழுதாக அமைந்தது. Kindred souls each one of them- great conversation, sumptuous repast, laughter and bonhomie.
பிரசன்னாவை முன்பு சந்தித்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் தான் அவருடன் ஆறஅமர பேச முடிந்தது. அவரது இசை பரம்பரை, இசையில் நாட்டம், இளையாஜா பாடல்கள் மீது தீராத மோகம் என்று அழகாக விவரித்தார். ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யமாக கழிந்துக்கொண்டிருந்த போது தான் சம்பவம் நிகழ்ந்தது.
என் எதிரே அமர்ந்திருந்த OISG சங்கர் (எனக்கு பரிச்சமில்லாத) தனது நண்பர் ஒருவரை பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்தார்... என்ன சொன்னார் என்று சுத்தமாக நினைவு இல்லை. ஏனென்றால் அந்த நண்பரின் பெயர்-"ஆரண்ய"நிவாஸ்!
அந்த நொடியிலிருந்து நான் Woodlandsசிலிருந்து Wood landsசுக்கு கடத்தபட்டேன்!ஆம் Wood lands -அதாவது ஒரு காட்டு பகுதியில் அடுத்த நொடியில் இருந்தேன்.
அது அடர்ந்த காடு. போலிஸ்காரர்களிமிருந்து தப்பிவந்த டாக்டர் ரமேஷூம் (நடிகர் திலகம்) ஜானகியும் (சுஜாதா) காட்டின் நடுவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்த தேக்குமர wood logs கட்டுக்களுக்குள் ஒரு மிகச்சிறிய இடத்தில் மறைந்திருந்தார்கள், தங்களை மறந்திருந்தார்கள்....
//🎵ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா..🎵.//
என்று பாடியபடியே அங்கு வாணிம்மா என்னை ஆட்கொண்டார். SPB என்னை ஆறத்தழுவி வரவேற்க காத்திருந்தார். கவியரசர் எழுதிக்கொடுத்த வரிகள் மெட்டுக்குள் அழகாக வந்தமர்வதை மெல்லிசை மன்னர் மெச்சிக்கொண்டிருந்தார்!
இவ்வளவு நெருக்கமான காட்சியில்...🤭 பாவம் சுஜாதா என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்... படத்தில் ( அண்ணன் ஒரு கோயில்) சிவாஜி கண்ணாடி அணிந்து இருப்பாரே... இந்த நெருக்கமான காட்சியிலும் கண்ணாடி அணிந்திருந்தாரா என்று யோசிக்கலானேன். அதே நொடியில் இந்த காட்சிக்கு தேவையில்லாத ஒரு ஓவர்கோட்டை சிவாஜி அணிந்திருந்தாக ஒரு ஞாபகம். அதைக்கூட மன்னித்துவிடலாம், அவரின் பிங்க் கலர் பேண்ட் என் நினைவில் வந்து தொலைத்து.... என் தட்டில் இருந்த சப்பாத்தியை அந்த காஸ்ட்யூம் டிசைனர் என எண்ணிக்கொண்டு பீஸ்பீஸாக கிழித்து திருப்தியடைந்தேன்.
பாடல்வரிகள் மீண்டும் என் கவனத்தை ஈர்த்தன. கதாநாயகன் பெயர் ரமேஷ். கதாநாயகி பெயர் ஜானகி. காட்டினில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த கட்டத்தில் ரமேஷையும் ஜானகியையும் ராமாயணத்தோடு எவ்வளவு அழகாக பொருத்துகிறார் கண்ணதாசன்!
ஆரண்யக் காண்டம்! (பாடல் காட்சிக்கு இரண்டாவது வார்த்தை வேறொரு மொழியில் கூட ...ச்சே ச்சே மனது ஏன் இப்படி துஷ்ட வழியில் செல்லவேண்டும்🙈) வனவாசத்தில் மரக்குடிலில் ஜானகி ரமேஷை தன் மடியை அயோத்தி பஞ்சனை போல் பாவிக்கும்படி அழைக்கிறார்.
அடுத்து, ரகுவம்சம் எழுதிய காளிதாசன் தானே சாகுந்தலத்தையும் எழுதினார்!
🎵சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு🎵
இதில் 'இறங்கு' என்ற வார்த்தை வரும் போது மெட்டும் சற்று கீழே இறங்கும். MSV🙏🙏
'தலையடியில் கை வைத்து உறங்கு' என்று இரண்டாம் முறை பாடும் போது, வாணிம்மா சற்று குரலை தாழ்த்தி நாணத்துடன் கிசுகிசுப்பதாக தோன்றியது....
சில நிமிடங்கள் தற்சமயத்திற்கு மீண்டு வந்தேன். நண்பர் நாராயணன் orkut , blog காலங்களை பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். சங்கர் 'விடுதலை' பாடல்களை பற்றி தன் மேலான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த பாடல் எனக்கு விடுதலை அளிக்காமல் துரத்திக்கொண்டே வந்து கைவிலங்கு பூட்டி மீண்டும் அந்த காட்டுக்குள் அழைத்துச்சென்றது.
சரணங்களில் ரம்மியமான திலங் ஸ்கேல் மனதுக்குள் ஓடிமுடிந்ததும் அந்த interlude இசையில் சற்று நேரம் லயித்தது. பாடல் காட்சியில் சரணங்களில் சிவாஜி- சுஜாதவை focus செய்தாலும் இடையிசையில் காட்டுப்பாதைகளில் இவர்களைத்தேடி வேகமாக வரும் போலிஸ் ஜீப்பை காண்பிப்பார்கள். ஜீப்பிலிருந்து அதிவேகமாக குதித்து இறங்கி தேடலை மேற்கொள்ளும் போலிஸ்காரர்களை காண்பிப்பார்கள். (அந்தகாலத்து போலிஸ்கார்கள் எப்படித்தான் அந்த லூஸான ட்ராயர்களை சீருடையாக ஏற்றுக்கொண்டார்களோ என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்) இந்த சஸ்பென்ஸான தேடலுக்காக MSV பாடலின் நடையில் திடீரென்று acceleratorரை அழுத்துவார். மிருதங்கமும் stringsசும் பரபரப்பாக தாண்டவமாடும்.
இந்த சுனாமியின் நடுவே ஒரு சாந்தமான சூழலை கொண்டுவர முடியுமா? முடியமே... வாணிம்மா 'ஆஆஆ....' என்று ஆரம்பித்து, SPB தொடர்ந்து, வாணிம்மா முடிக்கும் அந்த ஹம்மிங்கை கேட்டுப்பாருங்கள்....இல்லை இல்லை...கேட்க மட்டும் செய்யுங்கள்.... ஆஹா.... ஆஹா...💖
மீண்டும் சுதாரித்துக்கொண்டு நண்பர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கவனிக்க முயற்சித்தேன். பிரபலமான ஒரு முகநூல் குழுவை பற்றி நகைச்சுவை கதைகள்- சிரித்து, ரசித்து கேட்டுக்கொண்டிருந்தேன். குருஜி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது காஃபி ஆர்டர் பண்ணலாமா என்று ஸ்ரீதர் கேட்டார். ஆர்வி ஆர்வமாய் தனக்கு பால் வேண்டுமென கேட்டவுடன் இந்த பாடல் என்னை மீண்டும் தன்பால் இழுத்துக்கொண்டது....
//🎵பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா...🎵//
அந்த 'என்னம்மா'வை SPB ஒரு குறும்பான சிரிப்போடு உச்சரிப்பதை எண்ணி சிலாகித்துக்கொண்டேன்.
எவ்வளவு அழகான பாடல், ஆனால் நண்பர்கள் கூடிமகிழும் வேளை பார்த்துதானா அது என்னை இப்படி அலைக்கழிக்க வேண்டும்🤷♂️
பாடலின் ஒலி வடிவம்:
https://www.youtube.com/watch?v=lFrGDYnFx80
நான் இவ்வளவு சொல்லியும் பாடலை பார்த்தே ஆகவேண்டுமென்றால், Caveat Emptor, though😬:
https://youtu.be/eYKLxl-Gi28?feature=shared
சரி, எப்படியோ அந்த பாடலின் பிடியிலிருந்து என்னை விடிவித்துக்கோண்டு மீண்டும் வந்தேன், மீண்டு வந்தேன். எல்லோரும் மேஜையை விட்டு எழுந்து வெளியே வந்தோம். ஃபோட்டோ செஷன் முடிந்து இந்த இனிமையான சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த பிரசன்னாவுக்கும் ஸ்ரீதர் சாருக்கும் நன்றிக்கூறி விட்டு கிளம்பினோம்.
நாராயணன் தன் புது 'ஓலா' பைக்கில் என்னை வீட்டில் இறக்கி விடுவதாக ஏற்பாடு. நண்பர்களில் யாரோ ஒரு புண்ணியவான் 'ஓலா' பைக் எப்படி இருக்கிறது என்று கேட்டு வைத்தார். 'ஓலா' பைக் பற்றி பேச்சு சற்று நேரம் தொடர்ந்தது. அவ்வளவுதான்..... நான் எப்போது பைக்கில் நாராயணன் பின்னால் ஏறினேன்.... வழியில் அவர் என்னிடம் எதையாவது பேசினாரா.... இறக்கிவிடும்போது நன்றி தெரிவித்து விடைப்பெற்றேனா எதுவும் நினைவில் இல்லை...
ஏனென்றால் நான் இப்போது இளையராஜாவிடமும், யேசுதாஸிடமும், (சற்று இறுக்கமாக) ஜென்ஸியிடமும் சிக்கிவிட்டிருந்தேனே....🤦♂️
//🎵ஓலா ஓலா ஓலல்லா...
ஓலா ஓலா ஓலல்லா.....🎵//
நான் பைக்கில் எங்கே வந்தேன்? நான் தான் மீன் கொடித் தேரில் ஊர்வலம் போன மன்மத ராஜனாக மாறிவிட்டிருந்தேனே.... 🙆♂️
https://youtu.be/fdnQExH7fZs?feature=shared
- பரிதாபங்கள் தொடரும்....
#பாட்டுரசிகனின்பரிதாபங்கள்
No comments:
Post a Comment