dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, August 19, 2026

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..

 அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா..... 🙏


ஜானகியம்மா என்னிடம் அடிக்கடி சொன்னதது ' என்னமோ தெரியல சரவணா... சினிமா ஃபீல்ட்ல யார்கிட்டேயும் நான் touchல இல்ல... சாரதாவை தவிர.... சாரதா எனக்கு ஃப்ரெண்டுக்கு மேல... தங்கச்சி மாதிரின்னு கூட சொல்லலாம்.... நான்னா அவளுக்கு உயிரு....' 


ஜானகியம்மா மறைந்துப்போய் ( இப்படி டைப் செய்யும் போதே கை நடுங்குகிறது...) ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது... இன்னும் என் துக்கம் குறைந்தபாடில்லை... இப்படி ஆகிவிட்டதே என்று மனது ஆற்றாமையில் தவிக்கிறது...


ஜானகியம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்த சாரதாவை பார்த்தால் சற்று ஆறுதல் கிடைக்கலாமென்று நண்பர் சுந்தரிடம் கேட்டேன். என் மனநிலையை நன்கு உணர்ந்த அவர் அவரது நண்பர் ஸ்ரீதரிடம் சொல்லி இன்று சாரதாவை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது அழகான வீட்டில் சந்தித்தோம்.


கைக்கூப்பி மிக அன்பாக வரவேற்றார், மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் வென்ற சாரதா. எளிமையான தோற்றத்திலும் கம்பீரமான ஓர் அழகு இருந்தது. வயது 81 ஆகிறதாம். சன்னமாக, ஆனால் துல்லியமாக அழகான தமிழில் பேசினார்.  


ஏற்கனவே என்னை பற்றி அவர்கள் சொல்லியிருந்ததால் கனிவான பார்வையுடன் என்னை பற்றி மென்மையாக விசாரித்தார். சில பொதுவான விஷயங்கள் பேசியப்பிறகு 'ஜானகியம்மா...' என்று மெல்ல ஆரம்பித்தேன். என் குரல் தடுமாறியது...


 சாரதாவின் முகத்தில் ஒரு நொடி பெரும் வலி வந்தது போல் ஒரு துடிப்பு... பிறகு சொன்னார்... 'ஜூலை 8 ஜானகியை பார்க்க மைசூருக்கு டிக்கட் புக் செஞ்சிருந்தேன்.. ஆனால் என் கூட துணையா வர இருந்தவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. அதனால postpone பண்ண வேண்டியதா போச்சு... அதுக்குள்ள 11th அன்னிக்கு ஜானகி போயிட்டா...'


தன்னால் சொன்னபடி வர இயலவில்லை என்பதை ஜானகியம்மாவிடம் சாரதா தெரிவித்த போது ஜானகியம்மா தன் ஏமாற்றத்தை கொட்டி அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை போட்டு என்னை கேட்க வைத்தார் சாரதா... "ஏம்மப்பா...' என்று ஜானகியம்மாவின் குரலை கேட்டதும் என் கண்கள் குளமாகின. 'Abba' ன்னுதான்  என்னை கூப்பிடுவார்... நெல்லூர் வழக்கம்...' என்றார் சாரதா.


60 வருடங்களுக்கு மேல் தழைத்து வந்த ஜானகியம்மாவுடனான தனது நட்பை பற்றி நிறைய பகிர்ந்துக்கொண்டார். இதே மகாலிங்கபுரத்தில் இசையமைப்பாளர் சலபதி ராவின் வீட்டில் ஜானகியம்மாவை முதல் முதலில் சந்தித்ததை பற்றி கூறினார். ஜானகியம்மாவின் மாமனார், மாமியார், கணவரை பற்றியெல்லாம் சுவாரசியமாக பேசினார். ஜானகியம்மாவின் கணவர் திரு ராம்பிரசாதின் சிபாரிசின் பேரில் தான் தன்னால் மலையாள சினிமாவில் நுழைய முடிந்தது என்று நன்றியுடன் நினைவு கூறினார்.


'மலையாளத்தில் எத்தனை அருமையான பாடல்களை உங்களுக்காக ஜானகியம்மா பாடினார்!' என்று வியந்தபடியே என் மனதிற்கு மிக நெருக்கமான'சூர்யகாந்தி சூர்யகாந்தி..' பாடலை பாட ஆரம்பித்தேன்... உடனே சாரதாவும் சேர்ந்து பாடினார்... அற்புதமாக... பல்லவியும் முதல் சரணத்தையும் முழுவதுமாக பாடினார்... சூரியகாந்தி பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும் வரை இந்த பாடலும் காற்றலைகளில் தவழ்ந்து ஒலித்துகொண்டிருக்கும்...


https://youtu.be/5QvWHZN8hO8?si=0kMJZwFpHud6yweE


'மலையாளத்தில எனக்கு நூத்துல எண்பது பாட்டு ஜானகிதான் பாடியிருப்பார். நான் தயாரிச்ச ஒரு மலையாள படத்துக்கு முதல்ல appoint பண்ணியிருந்த music director ஜானகிக்கு ஒரு பாட்டுக்கூட கொடுக்கிறதா இல்ல. நான் அந்த music directorரையே மாத்திட்டேன்..' என்றார் சிரித்துக்கொண்டே. 


'தமிழிலும் எனக்கு ஜானகி கொடுத்த பிரமாதமான அறிமுகம் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாட்டு...' என்றார் சாரதா. அந்த காவிய பாடலின் சில வரிகளையும் பாடினார்...


https://youtu.be/_p0aPLPRk0E?si=T8NsmPiYDrQkf2bI


'துளசி மாடம்' படத்திலும் சந்திரகாந்தாவும் நீங்களும் பாடுற பாட்டை சூலமங்கலம் ராஜலட்சுமியோடு சேர்ந்து ஜானகியம்மா தான பாடினாங்க..' என்றேன். 'எந்த பாட்டு.. கவனமில்லையே?' என்று கேட்ட சாரதா, 'மையைத் தொட்டு எழுதியவர்...' என்று நான் ஆரம்பித்தவுடனே 'என் மனதை தொட்டு எழுதிவிட்டார்..' என்று புன்னகையுடன் முடித்தார்...


https://youtu.be/X0GlMuQ5CgI?si=hmJEXEWlOC3ZcrLZ


'மழை மேகம்' படத்தில் ஜானகியம்மா அவருக்காக பாடிய துள்ளலான 'சொக்கு பொடி போட்டானா மச்சான் மச்சான்' பாடலையும் மென்மையான 'ஒரு கோடி சுகம் வந்தது' பாடலையும் நான் நினைவுகூற சந்தோஷமாக தலையசைத்தார்.


https://youtu.be/6Jy9edK8Rk4?si=yCO4kSfet7jHxtFR


https://youtu.be/KOn5RYHAvNk?si=uZZ660DBcjRIrWw8


இதற்கெல்லாம் மேலே என் மனதை முழுவதுமாக ஆட்கொண்ட பாடலொன்று சாரதாவுக்காக ஜானகியம்மா பாடியது. அதை என் அலைபேசியில் ஒலிக்கச்செய்து அவரிடம் கொடுத்தேன்... அந்த பொன்னூஞ்சலை கட்டி விட்டு சிறிது நேரம் அவரை அதில் ஆட்டி விட்டேன்...


https://youtu.be/uIfJJescPBY?si=dmcvxYjqjv05xpdi


சாரதாவின் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீர் என் கைகளை நனைத்தது... ஒரு விசும்பலுடன் ஃபோனை என்னிடம் திருப்பி கொடுத்தார். அவர் கைகளை தட்டிக்கொடுத்தேன். கனமான மௌனம்.


'ஒவ்வொரு நாள் காலேலயும் நான் walk போகும் போது சூரிய பகவான பார்த்து முதல்ல வேண்டிக்கிறது 'என் ஜானகிய பார்த்துக்கோ' னு தான்... எல்லாம் போச்சு...' என்று சொன்னார் உடைந்த குரலில். 


பிறகு இன்னும் நிறைய ஜானகியம்மாவை பற்றி பேசினோம். கிளம்பும்போது சாரதா சொன்னார் 'அழுதுட்டா மனசு லேசாயிடும்... ... உனக்கெல்லாம் சின்ன வயசு... ஜானகியோட ஆசி உனக்கு என்னைக்கும் இருக்கும்... எப்ப வேணும்னாலும் இங்க வா...' 


காரில் வீடு திரும்பும் போது மடை திறந்தது போல் கண்ணீர் கசிந்தது. நிஜமாகவே மனதில் பாரம் குறைந்தது போல் இருக்கிறது. இன்று அநேகமாக தூக்கம் என் கண்களை தழுவும்... அமைதி என் நெஞ்சில் நிலவும்... ஜானகியம்மா தொடர்ந்திருப்பார்... துணையிருப்பார் 🙏

- சரவணன் நடராஜன்

https://www.facebook.com/share/19SD2FN1zX/

No comments:

Post a Comment